அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் டிச.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 2006 இல் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது, அமைச்சரின் மனைவி, சகோதரர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை.
அமைச்சரின் மூன்று மகன்களில் ஒருவரான அனந்த மகேஸ்வரன் மட்டுமே ஆஜர் ஆனார். இதையடுத்து, வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி வசந்தி, அடுத்தகட்ட விசாரணையை வருகிற டிச. 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.







Leave a Reply