சட்டவிரோத குடிநீர் இணைப்பு வழங்கிய கயத்தாறு பேரூராட்சித் தலைவர் மீது கலெக்டரிடம் புகார்


தூத்துக்குடி.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாபு மாவட்ட கலெக்டர் இளம்பகவத்திடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பேரூராட்சித் தலைவர் சுப்புலட்சுமியின் நிர்வாகம் அளவுக்கு மீறிய ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
அலுவலகத்துக்கு தலைவர் சுப்புலட்சுமி வராத காரணத்தினால், அவரது மாமனாரும், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டி, அங்கு அமர்ந்து கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் அத்தனை காண்ட்ராட்டுகளையும் அவரே நேரடியாகப் பேசி முடித்து கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் கயத்தாறு மக்கள்.
சட்டவிரோதமாக ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் கொடுத்ததன் மூலம், அரசுக்கு வந்திருக்க வேண்டிய பல லட்சக் கணக்கான பணம் கொள்ளை போயிருக்கிறது.
அடுத்ததாக வீட்டு மனை, கட்டிடப் பிளான் அப்ரூவல் செய்யும் பணிகளிலும் பல லட்ச ரூபாய் ஏப்பம் விடப்பட்டிருக்கிறது.
இவை மட்டுமின்றி, பேரூராட்சியில் பணியாற்றும் தினக் கூலித் தொழிலாளர்களின் ஊதியப் பணத்திலும் லட்சக் கணக்கான பணம் கையாடப் பட்டிருக்கிறது. மேலும், திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்திலும் பெருமளவில் அரசுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
தலைவர் சுப்புலட்சுமி, அவரது மாமனார் சின்னப் பாண்டி, மற்றும் இந்தப் பேரூராட்சியின் செயல் அலுவலராக இருந்து, தற்போது வேறு ஊருக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் சேர்ந்து தான் இந்த மெகா ஊழல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கியும், மக்களுக்குச் சேர வேண்டிய திட்டங்களில் மிகப் பெரிய ஊழல்கள் செய்திருக்கும் இந்த மூவர் மீதும், தாங்கள் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *